தலைப் பிறையும் நமது நிலையும்
(அல்-குர்ஆன் அஸ்சுன்னா மற்றும் அறிவியலின் ஆதாரங்களின் அடிப்படையில்)
பிரதி வருடமும் புனிதமான நோன்பு மாதம் வரும் போது கூடவே கருத்து வேறுபாடுகளும் குழப்பங்களும் குதர்க்க வாதங்களும் குறிப்பாகத் தமிழ் இஸ்லாமிய உலகை மையப்படுத்தி வந்து விடுவதனைப் பார்கின்றோம். அவற்றுள் முதலாவது கருத்து முறண்பாடு மாதத்தைத் துவங்குவதில் ஆரம்பமாகின்றது. அதிலும் ஆச்சரியம் என்னவென்றால் ஒரே ஊரில் இரண்டு மூன்று நாட்க்கள் வித்தியாசத்தில் மாதம் ஆரம்பிக்கப்படுவதனைப் பார்குகின்ற போது மிகவும் கேவலமாகவே உள்ளது.
இந்த எமது செயற்பாடு நமக்கு மத்தியில் காணப்படும் பின்வரும் பலவீனங்களைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது.
1. பிறை தொடர்பாக நமது மார்க்கக் கல்வியில் காணப்படும் பலவீனம்:
அதாவது சூரியன்; பூமி பிறை ஆகியவற்றுக்கிடையாலான உறவு அவை ஒவ்வொன்றினுடையவும் படைப்பின் நோக்கம் மற்றும் அவைகளின் கொழிற்பாடு பற்றி அல்-குர்ஆனும் அஸ்சுன்னாவும் என்ன சொல்கின்றது என்பது பற்றிய சரியான கண்ணோட்டம் இன்னும் எமக்கு ஏற்ப்பட்டதாகக் காணமுடியவில்லை.
2. நமது வானவியல் விஞ்ஞான தொழிநுட்ப்ப அறிவின் பலவீனம்:
அதாவது மார்க்கம் எவ்வகையிலும் தடை செய்யாத நிறூபிக்கப்பட்ட விஞ்ஞான அறிவியலைப் பற்றி அறிந்து கொள்வதிலும் அல்லது அதனை நடைமுறைப்படுத்துவதிலும் நாம் இன்னும் தயக்கம் காட்டியே வருகின்றோம்.
3. தலைமைத்துத்தில் காணப்படும் பலவீனம்:
அதாவது அகில இலங்கை உலமா சபை போன்ற சரியான நேரத்தில் உரிய முறையில் தீர்க்கமானதும் காத்திரமானதுமான முடிவுகளை எடுக்க வேண்டிய நமது தலைமைகள் அவர்களுக்கு மத்தியிலேயே உடன்பாட்டுக்கு வரமுடியாது அவர்களும் குழம்பி சமூகத்தையும் குழம்பச் செய்யும் ஒரு வகையான தளம்பல் நிலை
4. கட்டுப்படுதலில் காணப்படும் பலவீனம்.
அதாவது ஒவ்வொரு தனிமனிதனும் இயக்கமும் குழுவும் ஆளுக்காள் ஆராய்ச்சியாளராகி தங்களது கருத்துதான் சரியானது எனவே அனைவரும் தங்கள் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிடிவாதத்தின் காரணமாகப் பொதுவாக சமூகத்தை மார்க்க அடிப்படையில் வழிகாட்டித் தலைமைத் தாங்கிக் கொண்டிருக்கும் உலமா சபை போன்ற அமைப்புக்குக் கட்டுப்படத் தயங்குதல்.
மேற்படி இந்த நான்கு வகை பலவீனங்களும் முடிந்த வரை நம் சமூகத்திலிருந்து களையப்படுதல் வேண்டும் அப்போதுதான் நாம் ஓரளவேனும் சரியான ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியும்.
பிறை சம்பந்தமாக நமது ஷரீஆவின் கருத்தோட்டம் .
அல்லாஹ் கூறுகின்றான் : (நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்; ''அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (அல்-குர்ஆன்: 2:189.)
இந்த வசனத்தில் பிறைகளின் தொழிற்பாடு மனிதர்களுக்கு குறித்த சில மாதங்களுடன் தொடர்புள்ள தங்களது வணக்கங்களை உரிய காலத்தில் நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் காலம் காட்டுவதாகும் என்று வல்ல அல்லாஹ் தெளிவு படுத்துகின்றான். எனவே சந்திரனுடைய முதலாவது நோக்கம் மனிதர்களுக்கு அவர்களது வணக்கங்களுக்குரிய காலத்தை அறிவிப்பதாகும் எனலாம்.
அடுத்ததாக சந்திரனுடைய மாறிமாறி வரும் படித்தரங்கள் பற்றி பின்வருமாறு அல்-குர்ஆன் கூறுகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான் : அவன்தான் சூரியனைச் (சடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரணை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை -. (அல்-குர்ஆன்: 10:5.)
இந்த வசனத்தில் பிறையின் நாளாந்த மாற்றங்கள்; ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் அறிவிப்பதாகும் என்றுக் கூறப்பட்டுள்ளது.
புவியின் சுழற்ச்சி எவ்வாறு இரவு பகலை ஏற்ப்படுத்தகின்றதோ அவ்வாறே சந்திரனின் பவி மீதான சுழற்ச்சி மாதங்களை பிறப்பிக்கின்றது மாதங்களைக் கணிப்பதற்கு அல்லது கணக்கிடுவதற்க்கு பிறையின் புவி மீதான சுழற்ச்சியைத் தவிர வேறு எந்தவிதமான கணிப்பீடுகளும் கிடையாது.
அடுத்து வருடம் என்பது பண்ணிரண்டு மாதங்கள் என்பதனையும் பின்வரும் வசனம் தெளிவு படுத்துகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான் : நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு . (அல்-குர்ஆன்: 9:36)
எனவே மேற்படி மறைவசனங்களிலிருந்து சந்திரன் படைக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் மாறிமாறி வரும் பல படித்தரங்களின் தொழிற்பாடு என்ன என்பதனைப் புரிந்து கொண்டோம் அந்த புரிதலின் அடிப்படையில் நாம் எவ்வாறு அதனை நடைமுறைப்படுத்துவவது என்று பாரக்க இருக்கின்றோம்;.
வானவியல் விஞ்ஞான அறிவியலின் அவசியம்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இப்புவியானது ஒரு பந்து போன்று உருண்டை வடிவமானது பொதுவாக ஒரு உருண்டை வடிவமானது 360 பாகைகளைக் கொண்டதாகும் இந்த வகையில்; இப்பூகோளமும் 360 பாகைகளைக் கொண்டதாகும் இதன் ஒரு பாகையிலிருந்து அடுத்த பாகைக்குரிய தூரம் நான்கு நிமிடங்களாகும் அப்படியாயின் அதன் மொத்த நிமிடங்கள் 360 * 4 =1440 நிமிடங்கள் ஆகும் இதனை மணித்தியாலத்திற்கு 60 நிமிடங்கள் எனும் அடிப்படையில் 1440 நிமிடங்களை 60 ஆல் பிரித்தால் 1440 / 60 = 24 மணித்தியாலங்கள் ஆகும் இதுவே ஒரு நாள் எனக்கொள்ளப்படுகின்றது.
அதாவது பூமி தன்னைத்தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றிக்கொண்டிருக்கின்றது இவ்வாறு பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்றுவதற்கு எடுக்கும் காலமே மேலே நாம் பார்த்த 24 மணித்தியாலங்களான ஒரு நாளாகும் பூமியின் இந்த சுழற்ச்சிதான் பூமியில் இரவு பகலை ஏற்படுத்துகின்றது.
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவு ஒரு சூரிய வருடம் எனக் கொள்ளப்படுகின்றது. இவ்வாறு பூமி சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு எடுக்கும் காலம் 365 நாட்களும் 5 மணித்தியாலமும் 48 நிமிடமும் 46 வினாடியுமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அவ்வாறே சந்திரன் தன்னைத்தானே சுத்துவதுடன் பூமியையும் சுத்திக்கொண்டிருக்கின்றது சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவு சில நேரம் 29 நாட்களாகவும் சில நேரம் 30 நாட்களாகவும் இருக்க இடமுண்டு இதனை ஆய்வாளர்கள் சராசரியாக 29.53 நாட்கள் எனக்கொள்வார்கள். இதுவே ஒரு மாதம் எனக் கொள்ளப்படுகிறது
இவ்வாறு மேற்கூறப்பட்ட பூமி சூரியனை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவாகிய 365 நாள் 5 மணி48 நிமிடம் 46 வினாடி கால அவகாசத்திற்குள் சந்திரன் 12 முறைகள் பூமியை சுற்றி முடிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் 354.3671 நாட்கள் ஆகும் இது சந்திர வருடம் எனக்கொள்ளப்படும்.
இந்த மேற்கூறப்பட்ட அல்-குர்ஆன் அஸ்சுன்னா மற்றும் அறிவியலின் ஆதாரங்களின் அடிப்படையில் நோக்குகின்றபோது புவி தன்னைத் தானே சுற்றுவதனால் இரவு பகல் ஏற்ப்பட்டு ஒரு நாள் உருவாக்கம் பெறுகின்றது இந்த விடயத்தில் சந்திரனுக்கு எந்தவொரு பங்கும் கிடையாது.
அவ்வாறே சந்திரனின் புவி மீதான சுழற்ச்சியே மாதங்களை உருவாக்கம் செய்கின்றது இதற்க்கு சூரியனின் எத்தகய பங்களிப்பும் கிடையாது.
இங்கு இன்னுமொரு முக்கிய விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். அதாவது புவின் சுழற்ச்சி நாட்க்களை உருவாக்குவதுடன் அதன் சூரியன் மீதான சுழற்ச்சி சூரிய வருடத்தையும் உருவாக்குகின்றது.
அவ்வாறே சந்திரனுடைய புவி மீதான சுழற்ச்சி மாதங்களை உருவாக்கவது போன்றே சந்திர வருடங்களையும் உருவாக்குகின்றது.
சூரிய வருடம் சுமார் 365 நாட்க்கள் எனக்கொள்ளலாம் அவ்வாறே சந்திர வருடம் சுமார் 354 நாட்க்களைக் கொண்டதாகும் அதன் படி சந்திர வருடத்திற்க்கும் சூரிய வருடத்திற்கும் இடையே சுமார் 11 நாட்க்கள் வித்தியாசம் காணப்படும் . அல்-குர்ஆன் குகைவாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது இந்த இரண்டு வகையான வருடங்களைப் பற்றியும் குறிப்பிடுவதனைப் பார்க்கின்றோம்.
அல்லாஹ் கூறுகின்றான் : அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களும்; மேலும் அதிகமாக ஒன்பது (வருடங்களும்) தங்கினார்கள். (அல்-குர்ஆன்: 18:25)
அதாவது சூரிய வருடங்களில் கணக்கிட்டால் 300 வருடங்களும் சந்திர வருடங்களில் கணக்கிட்டால் 309 வருடங்களும் ஆகும்.
இந்த அடிப்படைகளைத் தெரிந்து கொண்டால்தான் நாம் பிறை மாதம் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ள முடியும்.
இஸ்லாமிய நாட்காட்டி (கலண்டர்) யின் அவசியம்
இஸ்லாம் ஓர் முழுமையானதும், அறிவுபூர்வமானதுமான மார்க்கம் அது மனித குலத்திற்க்கு இம்மை மறுமை ஆகிய ஈருலகுகின் அனைத்துத் துறைகளுக்கும் சரியானதும், முழுமையானதுமாகிய வழியினைக் காட்டக் கூடியது என்பதில் இருகருத்திற்கு இடமில்லை.
அப்படியிருக்க இன்று உலகில் மிகமுக்கியமான ஒரு தேவையாகக் கருதப்படக்கூடிய ஒரு இஸ்லாமிய நாட்காட்டி (கலண்டரை) உருவாக்கும் விடயத்தில் அது எமக்கு வழிகாட்டவில்லையா? என்பது பற்றி நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
அவ்வாறு நாம் ஆராய்ந்து பார்க்கின்ற போது நிச்சயமாக அது எமக்கு ஆக்கபூர்வுமானதும், அறிவுபூவமானதுமன வழியினைக் காட்டியுள்ளது என்பதனை எம்மால் எழிதில் புறிந்து கொள்ள முடிகின்றது. என்றாலும் நாம்தான் எமது கவனயீனத்தின் அல்லது அறியாமையின் காரணமாக அதனை புரிந்து கொள்ளாது குழம்பிப் போய்யுள்ளோம்.
ஆதலால்தான் யூதர்களுக்கும், கிரிஸ்தவர்களுக்கும் மாறு செய்யுங்கள் எனும் நபி (ஸல்) அவர்களின் கட்டளையையும் மறந்து இல்லை புறக்கணித்து யூதர்களாலும், கிரிஸ்த்தவர்களாலும் அறிமுகம் செய்யப்பட்ட முற்றிலும் அறிவுக்குப் புறம்பான கால ஓட்டத்திற்க்குத் தாக்குப்பிடிக்க முடியாது காலாகாலம் பல மாற்றங்களுக்கும் திருத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கிருஸ்த்துவக் கலண்டரைப் பின்பற்றிக்கொண்டிருக்கின்றோம்.
நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கும், கிரிஸ்தவர்களுக்கும் மாறு செய்யுங்கள் என்று சொன்னது வெறுமனே வணக்கவழிபாடுகளில் மாத்திரமல்ல வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும்தான் என்பதை நாம் புறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.
இந்த அடிப்படையில் இன்றைய இஸ்லாமிய உம்மத் ஒரு இஸ்லாமிய கலண்டரை அல்குர்ஆன், அல்ஹதீஸ் அடிப்படையில் உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தல் வாஜிப் எனும் கட்டாயமாகும் எனும் நிலைப்பாட்டில் நாம் ஒன்றுபடுதல் வேண்டும்.
இன்று இஸ்லாமிய உலகில் மாதத்தினை ஆரம்பிப்பதற்கு பலவிதமான வழிமுறைகள் கையாளப்படுகின்றன என்றாலும் அவற்றுள் பின்வரும் மூன்று வகையான நிலைப்பாடுகளை நாம் முக்கியமானவைகளாகக் கொள்ளலாம்.
1. ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனித்தனிப் பிறை : அதாவது அந்த அந்த பிரதேசத்தில் பிறை பார்க்கப்பட்டு அதன் அடிப்படையில் பிறை பார்க்கப்பட்ட குறித்த பிரதேசங்களில் மாத்திரம் மாதத்ததை ஆரம்பித்தல்
2. முழு உலகுக்கும் ஒரே பிறை : அதாவது உலகில் எந்தவொரு பிரதேசத்தில் பிறை பார்க்கப்பட்டாலும் பார்க்கப்பட்டப் பிறை பற்றிய நம்பகமானத் தகவல் கிடைக்கும் பட்ச்சத்தில் அந்தத் தகவலின் அடிப்படையில் முழு உலக முஸ்லிம்களும் ஒரே நாளில் மாதத்தைத் துவங்குதல்.
3. கணிப்பீட்டுப் பிறை : அதாவது கணிப்பீட்டின் அடிப்படையில் முற்கூட்டியே மாதங்கள் கணிக்கட்டு அந்த கணிப்பின் பிரகாரம் முழு உலக முஸ்லிம்களும் ஒரே நாளில்; மாதத்தை ஆரம்பித்தல்.
இந்த மூனறு விதமான நிலைப்பாடுகளில் எது சரியானது அல்லது மிகச்சரியானது என்பதனை மேற்கூறப்பட்ட அல்-குர்ஆன் அஸ்சுன்னா மற்றும் அறிவியலின் ஆதாரங்களின் அடிப்படையில் சுருக்கமாக நோக்குவோம்.
முதலாம் வகையினர் அந்த அந்த பிரதேசத்தில் பிறை பார்க்கப்பட்டு அதன் அடிப்படையில் பிறை பார்க்கப்பட்ட குறித்த பிரதேசங்களில் மாத்திரம் மாதத்ததை ஆரம்பித்தல் எனும் நிலைப்பாட்டில் இருப்பவர்கள். அவர்கள் இந்த தங்களது நிலைப்பாட்டிற்கு; முன்வைக்கும் ஆதாரங்கள்.
1. நபி (ஸல்) அவர்கள் : பிறையைப் பார்த்து நோன்பு வைய்யுங்கள் பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள் அது உங்களுக்கு மறைக்கப்பட்டால் அதனைக் கணித்துக் கொள்ளுங்கள். (புஹாரி முஸ்லிம்)
2. நபி (ஸல்) அவர்கள் : பிறையைப் பார்த்து நோன்பு வைய்யுங்கள் பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள் அது உங்களுக்கு மறைக்கப்பட்டால் மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். (புஹாரி முஸ்லிம்)
இவற்றுடன் இன்னும் பல ஹதீஸ் நூற்களில் இதே கருத்தில் பதிவாகியுள்ள பல நபி வழிச் செய்திகளையும் ஆதாரமாக முன்வைப்பார்கள்.
இந்த நபி வழிச் செய்திகள் எந்தவொன்றும் அவர்களின் அந்த அந்த பிரதேசத்தில் பிறை பார்க்கப்பட்டு அதன் அடிப்படையில் பிறை பார்க்கப்பட்ட பிரதேசங்களில் மாத்திரம் மாதத்ததை ஆரம்பிக்க வேண்டும் எனும் நிலைப்பாட்டிற்கு எவ்வகையிலும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.
ஏனெனில் இந்த நபி வழிச் செய்திகள் எந்தவொன்றிலும் பிரதேசத்தைக் குறிக்கக் கூடிய எந்தவொரு ஆதாரமும் கிடையாது மாறாக இந்த நபி (ஸல்) அவர்களின் பிறையைப் பார்த்து நோன்பு வைய்யுங்கள் பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள் எனும் கட்டளையானது முழு உலக முஸ்லிம்களுக்கும் பொதுவான ஒரு கட்டளையேயாகும்.
அதாவது முழு உலக முஸ்லிம்களில் யார் எந்தப் பகுதியில் பிறை பார்த்தாலும் அதனை உலகின் ஏனைய பாகங்களில் வாழுகின்ற அத்தனை முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்வது கடமையாகும்.
இரண்டாம் வகையினர் உலகில் எங்கு பிறை பார்க்கப்பட்டாலும் பார்க்கப்பட்ட நம்பகமான தகவலின் அடிப்படையில் முழு உலகுக்கும் ஒரே பிறை என்ற அடிப்படையில் அந்தத் தகவலை ஏற்று அனைவரும் ஒரே நாளில் மாதத்தை ஆரம்பித்தல் எனும் நிலைப்பாட்டில் இருப்பவர்கள். இவர்களும் தங்களது வாதத்திற்கு முதலாம் வகுப்பினர்கள் முன்வைத்த அதே நபி வழிச் செய்திகளையே ஆதாரமாக் கொள்கின்றனர்.
இரண்டாம் வகையினர்களின் வாதத்தை மேற்படி நபி வழிச் செய்தி வலுப்படுத்துவதாக உள்ளது ஏனெனில் நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று நபி (ஸல்) அவர்களின் பிறையைப் பார்த்து நோன்பு வைய்யுங்கள் பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள் அது உங்களுக்கு மறைக்கப்பட்டால் அதனைக் கணித்துக் கொள்ளுங்கள் எனும் கட்டளையானது முழு உலக முஸ்லிம்களுக்கும் பொதுவானதே
ஆகவே உலகில் எந்தப் பாகத்தில் ஒரு முஸ்லிம் பிறையைப் பார்த்தாலும் அந்த முஸ்லிமுடைய சாட்ச்சியத்தின் அடிப்படையில் உலகில் ஏனைய பாகங்களில் வாழுகின்ற அனைத்து முஸ்லிம்களும் ஒரே நாளில் மாதத்தைத் துவங்குதல் வேண்டும் எனும் இந்த இரண்டாம் வகையினரின் நிலைப்பாடு சரீஆவின் கண்னோட்டத்தில் சரியானதே .
மூன்றாவது வகையினர்கள் கணிப்பீட்டின் அடிப்படையில் முற்கூட்டியே மாதங்கள் கணிக்கட்டு அந்த கணிப்பின் பிரகாரம் முழு உலக முஸ்லிம்களும் ஒரே நாளில்; மாதத்தை ஆரம்பித்தல் எனும் நிலைப்பாட்டில் இருப்பவர்கள்.
அவர்களின் இந்த நிலைப்பாட்டிற்கும் அவர்கள் முன்வைக்கும் ஆதாரம் முதல் இரு தரப்பினர்களும் முன்வைத்த அதே நபி வழிச் செய்தியின் இறுதிப்பகுதியில் இடம் பெற்றுள்ள அது உங்களுக்கு மறைக்கப்பட்டால் அதனைக் கணித்துக் கொள்ளுங்கள். எனும் சொற்ப்பிரயோகமாகும்
எனவே மேற்கூறப்பட்ட மூன்று நிலைப்பாட்டில் முதல் தரப்பினரகளின்; நிலைப்பாடு வலுவிழந்து விடுகின்றது. ஏனைய இரண்டும் அல்-குர்ஆன் அஸ்சுன்னாவுடனும் நிறூபிக்கப்பட்ட வானவியல் விஞ்ஞான அறிவியலுடனும் ஒத்துபோகும் தண்மை கொண்டதாக் காணப்படுகின்றது.
இந்த இரண்டிலும் கணிப்பீடு என்பதில் நாம் உடன்பாட்டுக்கு வர முடியுமாக இருந்தால் அது ஒரு வகையில் எம்மை உலகளாவிய முஸ்லிம் சமூகத்தடன் இனைப்பதாகவும் எமக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்ப்படுவதற்கான பலமான ஒரு பாலமாகவும் அமையக் கூடும்.
அத்துடன் பிறையை வைத்து மாதத்தைத் துவங்குவதென்பது ஒரு வணக்கம் கிடையாது அது ஒரு மாதத்தின் ஆரம்பத்தை சரியாக அறிந்து கொள்வதற்க்கான நடைமுறை சார்ந்த ஒரு வழிமுறையேயாகும் என்பதைப் புரிந்து கொண்டால் இதில் ஏற்ப்படுகின்ற கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
அந்த வகையில் கணிப்பீட்டை பிழை என்று கூறி அதற்க்கு எதிரான கருத்தை முன் வைப்பவர்கள் அதற்க்கான அல்-குர்ஆன் அஸ்சுன்னாவின் அடிப்படையிலான ஆதாரங்களை முன் வைக்க வேண்டும்.
அத்துடன் எமது அன்றாடத் தொழுகைகளுக்கு சூரிய கணிப்பீட்டின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட நேரசூசியை ஏற்றுக் கொள்வது போன்றே மாதத்தைத் துவங்கும் விடயத்தில் சூரியனுக்கு எவ்வித பங்கும் கிடையாது அது முழுக்க முழுக்க சந்திரனைக் கொண்டுதான் தீர்மானிக்கப்படும் அந்த வகையில் சந்திர கணிப்பிட்டின் அடிப்படையில் அதனை நாம் முன்கூட்டியே கணித்துக் கொள்வதில் மார்க்கம் தடுக்காத வரை எவ்விதமான தவறும் கிடையாது.
ஏனெனில் விஞ்ஞான அறிவியலில் முன்னேற்றம் காணப்படாத மற்றும் எவ்வித தொலைதொடர்பு வசதிகள் இல்லாதிருந்த காலங்களில்;; பிறையைப் பார்த்துத்தான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாததே. அதற்காக விஞ்ஞான அறிவியலில் முன்னேற்றம் கண்டுள்ள ஒரு தகவலை ஒரே நிமிடத்தில் முழு உலகுக்கும் தெரியப்படுத்தம் தொழிநுட்ப்ப வசதிகளைக் கொண்டுள்ள இந்தக் காலத்திலும் அதே வழிமுறையைப் பின்பற்றித்தான் மாதத்தைத் துவங்க வேண்டும் என்று கூறுவது அவ்வளவு தூரம் அறிவுபூர்வமான ஆரோக்கியமான கருத்தாக இருக்க முடியாது.
எனவே இதனைத் தவறாகப் பார்ப்பவர்கள் சூரிய கணிப்பீட்டை ஏற்றுக் கொள்வதென்பது உண்மையில் அவர்களின் ஒன்றுக்கொன்று முறன்பட்ட நிலைப்பாட்டையே தெரிவிப்பதாக உள்ளது.
ஒரு திகதி என்பது ஒரு நாளைக்கு உரியதே அவ்வாறின்றி ஒரு திகதி ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வௌ;வேறுத் தனிப்பட்ட நாட்களில் வர முடியாது. அப்படி வரமுடியும் என்று நம்புவது நமது ஷரீஆ மற்றும் விஞ்ஞான அறிவியலின் பற்றாக்குறையையே பிரதிபலிக்கும் செயலாகும்.
உதாரணமாக உலகில் கி.பி 2014 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி புதன் கிழமை என்றால் அது முழு உலகிலும் புதன் கிழமையாகத்தான் இருக்கின்றது. மாறாக ஒரு பகுதியில் வியாழக் கிழமை என்றோ அல்லது வெள்ளிக்கிழமை என்றோ வருவதும் இல்லை. அவ்வாறு வர முடியும் என்று யாரும் கூறினால் அதனை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை.
அவ்வாறே உலகில் அனைத்து பாகங்களிலும் ஜும்ஆத்தொழுகை வெள்ளிக்கிழமையில்தான் நடைபெறுகின்றது மாற்றமாக வியாழக்கிழமை என்றோ சனிக்கிழமை என்றோ வருவதுமில்லை அவ்வாறே ஒரு பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை ஜனவரி 02ம் திகதி என்றும் இன்னும் ஒரு பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை ஜனவரி 03 ம் திகதி என்றும் வந்ததும் இல்லை இனிமேலும் வரப்போவதும் இல்லை. உதாரணமாக இலங்கையில் 2014 ம் ஆண்டு ஜனவரி மாதம் 03ம் திகதி வெள்ளிக்கிழமை வந்ததென்றால் உலகின் அனைத்துப்பாகங்களிலும் 2014 ம் ஆண்டு ஜனவரி மாதம் குறித்த வெள்ளிக்கிழமை 03ம் திகதியாகத்தான் இருக்கும்.
அதே நேரம் நாம் இலங்கையில் ஜும்ஆத் தொழுது கொண்டிருக்கும் அதே சமநேரத்தில் உலகில் இன்னும் ஒரு பகுதியில் வியாழக்கிழமை ழுஹர் தொழுவார்கள் என்றாலும் அவர்களும் ஒரு நாளைக்கு உரிய 24 மணித்தியால அவகாசத்திற்குள் வெள்ளிக்கிழமையை அடைந்து கொள்வார்கள்.
இது இவ்வாறு இருக்க துரதிஸ்டவசமாக எமது தலைப் பிறைகள் மாத்திரம் ஒருசாரார்களுக்கு வியாழக்கிழமை என்றும் இன்னுமொரு சாரார்களுக்கு வெள்ளிக்கிழமை என்றும், இன்னும் ஒருசாரார்களுக்கு சில வேளைகளில் சனிக்கிழமை என்றும் இரண்டு மூன்று நாட்கள் வித்தியாசத்தில் வருவதனைப் பார்க்கின்றோம்.
இவ்வாறு வித்தியாசம் ஏற்படுவதற்கான முதற்காரணம் நாம் நபி (ஸல்) அவர்களது யூதர்களுக்கும், கிரிஸ்தவர்களுக்கும் மாறு செய்யுங்கள் எனும் கட்டளையினைப் புறக்கணிதமையும்;. அடுத்ததாக நாம் எமக்கென்று ஒரு நாட்காட்டி கலண்டரை உருவாக்கிக்கொள்iளாமையுமேயாகும்.
எனவே சம்மந்தப்பட்டவர்கள் பிறை சம்மந்தமாக சரியான கோணத்திலிருந்து ஆராய்ந்து சிறந்ததொரு நாட்காட்டி கலண்டரினை சமூகத்திற்க்க முன்வைக்குமாறு வேண்டுகிறேன்.
குறிப்பு : விரிவஞ்சி அல்-குர்ஆன் அஸ்சுன்னாவின் ஆதாரங்களும் இன்னும் மேலதிக விளக்கங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன வாசகர்கள் வேண்டுதல்கள் முன்வைக்கும் படச்சத்தில் அனைத்து ஆதாரங்களுடனும் விளக்குவதற்க்குத் தயாராக உள்ளேன் என்பதனை வாசகர்களின் கவனத்திற்க்குக் கொண்டு வருகின்றேன்.
முனாப் நுபார்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக